போடி: தேனி மாவட்டம் போடி அருகே நடிகர் யோகி பாபு நடிக்கும் சினிமா படப்பிடிப்பில், நடிகரின் உதவியாளரின் மூக்கை உடைத்த டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ‘மலையோரம் வீசும் பூங்காற்றே’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார். சேலம் பொன்னம்மாபேட்டை தம்பி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சதாம் உசேன் (35), இவர் நடிகர் யோகிபாபுவின் உதவியாளர். அதேபோல், சென்னை ஆழ்வார் திருநகர் பெரியார் நகர் வள்ளியம்மை சாலையை சேர்ந்த ராமச்சந்திரன் (31). நடிகர் யோகிபாபுவிடம் டிரைவராக உள்ளார்.
படப்பிடிப்பில் உதவியாளர் சதாம் உசேனுக்கும், டிரைவர் ராமச்சந்திரனுக்கும் இடையே கார் பார்க்கிங் பகுதியில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இது பெரும் சண்டையாக மாறியது. ராமச்சந்திரன் திடீரென சதாம் உசேனின் மூக்கில் குத்தினார். இதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதுபற்றி தகவல் அறிந்த நடிகர் யோகி பாபு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். தன்னை தாக்கியதாக ராமச்சந்திரன் மீது குரங்கணி காவல் நிலையத்தில் சதாம் உசேன் புகார் செய்தார். புகாரின் பேரில், எஸ்ஐ ராஜசேகர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நடிகரின் உதவியாளரும், டிரைவரும் தாக்கிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.