வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் விற்பனை செய்யப்படும் மண்பானை டீ, காபியை பலரும் ஆர்வமுடன் வாங்கி குடித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மதுரை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிர்புறம் மண்பானை டீக்கடை சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு டீ, காபி வழக்கம் போல தயார் செய்து, மண்பானையில் ஊற்றி, சூடு இறங்காமல் இருக்க கரி அடுப்பில் வைக்கப்படுகிறது. டீ, காபி கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட களிமண்ணால் செய்யப்பட்ட குவளையில் பிடித்து தருகின்றனர். உடலுக்கு நன்மை தருவதாக கூறப்படும் மண்பானை டீயை பலர் ஆவலுடன் வாங்கி குடிக்கின்றனர்.
இப்பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி கூறுகையில், ‘‘மண்பானை சமையல் சாப்பிட்டு இருக்கிறேன். மண்பானை டீ இப்போதுதான் குடிக்கிறேன். இந்த டீ வெயில் நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது’‘ என்றார். கடைக்காரர் சாந்தகுமார் கூறுகையில், ‘‘மண்பானையில் வைத்த சாப்பாடு, தண்ணீர் என அனைத்துமே உடலுக்கு நன்மைதான். அதுபோல் நமது தினசரி வாழ்க்கையில் விடுபடாத பானமாக இருக்கும் டீ, காபியை மண்பானையில் வைத்து கொடுக்கலாம் என முடிவு செய்து கடையை திறந்துள்ளேன். வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்’’ என்றார்.