சென்னை: திருக்காட்டுப்பள்ளி - செங்கிப்பட்டி- பட்டுக்கோட்டை சாலையில் வெண்ணாற்றின் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தின் புனரமைப்பு பணியை மேற்கொள்வதற்காக ரூ.2.23 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை: 2016-17க்கான பட்ஜெட் கோரிக்கையின் போது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்காக, முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், ‘திருக்காட்டுப்பள்ளி - செங்கிப்பட்டி- பட்டுக்கோட்டை சாலையில் வெண்ணாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தின் புனரமைப்பு பணியை மேற்கொள்ளப்படும்’ என அறிவித்தார்.
பிறகு வெளியிடப்பட்ட அரசாணையில் மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில், உயர்மட்டப் பாலத்தை புனரமைக்கும் பணிக்காக ரூ.16.53 லட்சத்திற்கு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான நிர்வாக அனுமதியின்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலைகள்) திட்டப்பணிகள் எழுதிய கடிதத்தில், ‘பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, சேங்கைப்பட்டி, விண்ணமங்கலம், பூண்டி, சித்திரக்குடி, கண்டமங்கலம், செந்தலை, ஒரத்தூர் போன்ற சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 35,000 பேர் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த வெண்ணாறு காவிரியின் கிளை ஆறாக இருப்பதால் ஆண்டுக்கு 6 முதல் 7 மாதங்கள் வரை நீரோட்டம் இருக்கும். தற்போதுள்ள பாலத்தில் 5.5 மீட்டர் மட்டுமே அகலம் இருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு போதுமான வசதி இல்லை.
எனவே 11.00 மீட்டர் அகலம் கொண்ட புதிய உயர்மட்டப் பாலத்தை புனரமைக்க வேண்டியது அவசியம். காவிரி ஆற்றின் மேற்குப் பகுதியில் 25 கி.மீ தொலைவில் உயர்மட்டப் பாலமும், தஞ்சாவூர் புறவழிச் சாலையின் கிழக்குப் பகுதியில் 20 கி.மீ தொலைவில் மற்றொன்றும் உள்ளது. முன்மொழியப்பட்ட உயர்மட்ட பாலத்தின் ஒரு பக்கத்தில், பூண்டி மாதா தேவாலயம், திருவையாறு மற்றும் கல்லணை போன்ற மத மற்றும் முக்கிய இடங்களை இணைக்கிறது. மறுமுனையில் பூதலூர் அரசு மருத்துவமனையையும் திருச்சி நகரையும் இணைக்கிறது. எனவே இதற்கு ரூ.2,23,00,000 வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனை அரசு கவனமாக ஆய்வு செய்த பிறகு தலைமைப் பொறியாளரின் முன்மொழிவை ரூ.2,23,00,000க்கான நிர்வாக அனுமதியை வழங்குகிறது. 2021-2022 நிதியாண்டில் ரூ. 2,00,000 மட்டுமே வழங்கப்படும். மீதமுள்ள தொகை அடுத்த நிதியாண்டில் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.