×

வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து விவகாரம்: இடைக்கால தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு..!

டெல்லி: வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு, இடைக்கால தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி மாதம் அரசு அளித்தது. இருப்பினும் அரசாணை பிறப்பிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

அப்போது, நீதிபதிகள், சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதை செய்யாமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இருப்பினும், ஏற்கனவே 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்று வரும் மாணவர்கள் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் ஏதும் செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15 மற்றும் 16-ம்தேதிகளில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Vannier ,Supreme Court , Vanniyar reservation, Supreme Court, denial
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...