×

லக்கிம்பூர் விவகாரத்தில் அஜய் மிஸ்ரா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?: எதிர்கட்சித் தலைவர்கள் சரமாரி கேள்வி

டெல்லி: உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். லக்கிம்பூர் சம்பவம் கவனக்குறைவால் நடந்தது அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இது தொடர்பாக உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான ஆய்வு அறிக்கையில் ஒன்றிய இணை அமைச்சரின் மகன் சம்பந்தப்பட்டது தெளிவாகியுள்ளது என்றார்.

ஆதலால் அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றம் கூடியதில் இருந்தே லக்கிம்பூர் சம்பவம் திட்டமிட்ட படுகொலை என கூறி வருகிறோம் என தெரிவித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, நிச்சமயாக சொல்கிறேன்; அஜய் மிஸ்ரா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றார். ஏனென்றால் எதிர்வரும்  உத்திரப்பிரதேச தேர்தலில் உயர்சாதி மக்களின் வாக்குகள் அவருக்கு தேவை என்பதே அதற்கு காரணம் என்றும் சாடியுள்ளார். அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுப்பதில் பிரதமருக்கு என்ன நெருக்கடி என்று புரியவில்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜாவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Ajay Mishra ,Lakhimpur , Lakhimpur, Prime Minister, Leaders of the Opposition
× RELATED அசாம் மாநிலத்தில் பதற்றம் ராகுல்...