ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக பிச்சாட்டூர் ஏரி மீண்டும் நிரம்பியுள்ளதால் 1600 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம் மற்றும் பிச்சாட்டூர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. ஏரியின் கொள்ளளவு 281 மில்லியன் கன அடியில் தற்போது 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.
இந்த நிலையில், மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் இரவு 280 மில்லியன் கன அடிக்கு மேல் நீர் இருப்பு அதிகரித்தது. தற்போது பிச்சாட்டூர் ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 1500 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி ஒரு மதகு வழியாக நேற்று முன்தினம் வினாடிக்கு காலை 1600 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிகிறது. பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் நிரம்பி வழிகிறது. இந்த பாலத்தில் மக்கள் ஆபத்தான முறையில் நடந்து செல்கிறார்கள். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.