×

ஆத்தூர் அருகே பரபரப்பு சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிக்கொண்ட தனியார் பள்ளி பஸ்

*40 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்பு

ஆத்தூர் : ஆத்தூர் அருகே, சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கியிருந்த மழை நீரில், தனியார் பள்ளி பஸ் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலிருந்த 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை, தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி பள்ளக்காடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று காலை வழக்கம் போல், மல்லியகரை, தாண்டவராயபுரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 40 மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு, பள்ளி பஸ் புறப்பட்டது. பஸ்சை கோபாலபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் வேல்முருகன்(34) என்பவர் ஓட்டி வந்தார். ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் பெரியார் நகர் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக வந்த போது, சுரங்கபாதையில் குளம் போல் தேங்கியிருந்த மழை நீரில் பஸ் சிக்கிக் கொண்டது.

டிரைவர் பஸ்சை இயக்க முயன்றும், அவரால் முடியவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.  சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து, பஸ்சை சுரங்கப்பாதையில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், முதலில் பஸ்சுக்குள் தவித்த மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பஸ்சையும் சுரங்கப்பாதையில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. ஆனால், மழைநீர் வெளியேற முறையான வசதியில்லாததால், தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல், மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து பலமுறை நகராட்சி மற்றும் ரயில்வே துறையினருக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  ஆத்தூர் நகரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகள் அனைத்திலும், இதே நிலை தான்  உள்ளது. இதனை சரி செய்ய உள்ளாட்சி  அமைப்புகளும், ரயில்வே துறையினரும் உடனடியாக நடவடிக்கை மேற்  கொள்ள வேண்டும்,’ என்றனர்.

Tags : Attur , Salem, Aathur, School Bus, Railway Bridge, Rain water
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...