கோவை: போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகாக ஆசிரியர் மிதுன் கைது செய்யப்பட்டிருந்தார். கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடந்த நவம்பர் மாதம் மாணவி தற்கொலை செய்துக் கொண்டார். இது தொடர்பாக அந்த மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, அப்போதைய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்ககோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மீரா ஜாக்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை மிதுன் சக்கரவர்த்தியை நீதிமன்ற காவலில் வைக்க ஏற்கனவே கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.