அகமதாபாத்: சூரத் நகரின் ரிங்க் ரோட்டில் உள்ள டேஸ்ட் ஆப் இந்தியா என்ற ஹோட்டல் உணவுத் திருவிழாவை நேற்று தொடங்கியது. 22- ஆம் தேதி வரை இந்த உணவு திருவிழா நடைபெறும் என்று மிகப்பெரிய அளவில் பதாகை கட்டப்பட்டு இருந்தது. பாகிஸ்தானிய உணவு திருவிழா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு RSS அமைப்பின் துணை அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்தவர்கள் அந்த ஹோட்டலுக்கு எதிராக முழக்கமிட்டனர். பதாகையை கழற்றிய அவர்கள் சாலையில் வைத்து தீ வைத்து கொளுத்தினர்.
இந்தியாவிற்குள் பாகிஸ்தானிய உணவு திருவிழா நடத்துவதா? என்று பஜ்ரங் தள் அமைப்பினர் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த செயல் தங்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது போன்ற நிகழ்ச்சிகளை சகிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். தவறு நடந்துவிட்டதாக அந்த ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரியதாக பஜ்ரங் தள் அமைப்பின் குஜராத் மாநில தலைவர் தேவி பிரசாத் துவே கூறியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை.