நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் தமிழக கவர்னர் நாளை தரிசனம் செய்ய உள்ளதால் கோயிலை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. மேலும் போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் கோயில் வளாகம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 2 நாள் பயணமாக இன்று நெல்லை வருகிறார். அவர், நாளை (15ம் தேதி) காலை 7.30 மணிக்கு நெல்லையில் வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாளை தரிசிக்கிறார்.
காலை 8.30 மணிவரை இங்கு அவர் இருப்பார். இதை முன்னிட்டு இப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்றே பலப்படுத்தப்பட்டது. சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கோயில் மற்றும் சுற்று ரதவீதி பகுதிகளை ஆய்வு செய்தனர். கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது. மேலும் கோயில் வளாகத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கவர்னர் வருகையை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.