செங்கல்பட்டு: தாயை பற்றி தவறாக பேசியதால், குப்பை பொறுக்கும் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு, படுகொலை செய்த, அவரது நண்பரை செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பைபாஸ் சாலை அருகேயுள்ள பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், 2 நண்பர்கள் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில், ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதில், ஆத்திரம் தலைக்கேறியதால், ஒருவர் அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து வந்து மற்றொருவரின் தலையில் போட்டுள்ளார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். இதுகுறித்து, தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நண்பரை கொலை செய்தவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்த சிவராஜ் (30) என்பதும், கொலை செய்யப்பட்டவரும், இவரும் செங்கல்பட்டு பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்தவாறு, குப்பைகளை பொறுக்கி, கடையில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்ததும், தனது தாயை நண்பர் தவறாக பேசியதால், ஆத்திரத்தில், அவரது தலையில் கருங்கல்லை போட்டு கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து சிவராஜிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.