திருப்போரூர்: செங்கல்பட்டு பணிமனையில் இருந்து செங்கல்பட்டு - மானாம்பதி இடையே முள்ளிப்பாக்கம், சென்னேரி வழியாக தடம் எண் டி 75, திருநிலை, ஒரகடம், அருங்குன்றம் வழியாக தடம் எண் டி11, எச்சூர், புலியூர், திருக்கழுக்குன்றம் வழியாக தடம் எண் டி.21 ஆகிய மூன்று நகரப்பேருந்துகள் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன. அதேபோன்று கல்பாக்கம் பணிமனையில் இருந்து திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் இடையே தடம் எண் 108 எம், 119பி, 19டி ஆகிய மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டன.
சிறு வியாபாரிகள், பால், தயிர் விற்பனையாளர்கள், சென்னை போன்ற புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்த இந்த நகரப் பேருந்துகள் கடந்த கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் இந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து 2 தனியார் பேருந்துகள் மட்டும் மானாம்பதி வழியாக திருப்போரூர் வரை இயக்கப்படுகிறது.
மக்களுக்காக இயக்கப்பட்ட இந்த பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டதால் சிறு விவசாயிகள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே, கிராமப்புற மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட நகரப்பேருந்து சேவையை செங்கல்பட்டு மற்றும் கல்பாக்கம் பணிமனை நிர்வாகங்கள் மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.