திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனத்தில் செல்லாத அவர், ரூ.300 டிக்கெட்டில் பொதுமக்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ெதலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு தனது தோழிகளுடன் இணைந்து அடிக்கடி ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்திருந்த அவர், நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கடும் கோபமடைந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனது தோழிகளுடன் கோயிலுக்கு வந்தார் சமந்தா. சில மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து செல்பி எடுக்க சம்மதித்த சமந்தா, பிறகு தனது தோழிகளுடன் காரில் புறப்பட்டு சென்றார்.