×

புளியந்தோப்பில் அதிகாலை பரபரப்பு தறிகெட்டு ஓடிய சொகுசு கார் சாலையில் கவிழ்ந்து விபத்து: 3 போதை வாலிபர்களிடம் விசாரணை

பெரம்பூர்: புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் இரவு நேர பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பிரியாணி சாப்பிட பல்வேறு பகுதியில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் மது போதையில் வந்து செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் இச்சாலை வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், தறிகெட்டு ஓடி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பாடி வண்டிகள் மீது மோதியது. பின்னர், சென்டர் மீடியனில் மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரில் சிக்கிய 3 வாலிபர்களை மீட்டனர். லேசான காயமடைந்த அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவி அளித்தனர். விசாரணையில் அவர்கள், பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (22), அதே பகுதியை சேர்ந்த விக்கி (21), திருமங்கலம் காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (22) என்பதும், இவர்கள் மூவரும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Puliyanthope , Luxury car overturns on road in Puliyanthope: 3 drug addicts
× RELATED புளியந்தோப்பில் அதிகாலை பரபரப்பு...