சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு மருத்துவக் கல்வி இயக்குநர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் மற்றும் துறைத்தலைவர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என 37 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகம் 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் 10வது துணைவேந்தராக மருத்துவர் சுதா சேஷய்யன் 2018 டிசம்பர் 31ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்தவற்கான குழுவை மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
மேலும் இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம், மைசூரில் அமைந்துள்ள ஜெஎஸ்எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் மருத்துவர் சுரேஷ், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதயநல சிகிச்சை துறை இயக்குநர் மருத்துவர் எஸ்.தணிகாசலம் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு மருத்துவக் கல்வி இயக்குநர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் மற்றும் துறைத்தலைவர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என மொத்தம் 37 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியான நபர்களை குழுதேர்வு செய்து அது குறித்த பரிந்துரைகளை பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநருக்கு அனுப்ப உள்ளது. அதனை பரிசீலனை செய்து அவர்களில் ஒருவரை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆளுநரால் நியமிக்கப்படுவதாக கூறுகின்றனர்.