ஆக்ரா: குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் பலியாகினர். இந்த விபத்தில், விமானப்படையின் விங் கமாண்டரான பிரித்வி சிங் சவுகானும் உயிரிழந்தார். பிரித்வி சிங் சவுகானுக்கு மனைவி, ஆராத்யா (12) என்ற மகளும், அவிராஜ் (7) என்ற மகனும் உள்ளனர். பிரித்வி சிங் சவுகானின் உடல், உத்தரப்பிரேதச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இதற்கு முன்பாக, பிரித்வி உடலுக்கு, ஏராளமான பொதுமக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். தகனம் செய்வதற்கு முன்பாக, பிரித்வியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி அருகே நின்றிருந்த அவரது மகன், தந்தையின் உடல் மீது வைக்கப்பட்டிருந்த அவரது தொப்பியை எடுத்து அணிந்து, தந்தையின் படத்தை பார்த்து வீர வணக்கம் செலுத்தினார். இந்த உருக்கமான சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. பிரித்வியின் மகள் ஆராத்யா அளித்த பேட்டியில், ‘‘மதிப்பெண்ணை தேடி போகக் கூடாது, படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென என் அப்பா கூறுவார். அதை நான் எப்போதும் பின்பற்றுவேன். அவரைப் போலவே நானும் விமானப்படையில் சேருவேன். என் அப்பா தான் என் ஹீரோ’’ என்றார்.