சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை டிச.29ம் தேதி நடைபெறும் என போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு 13வது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 14வது ஊதிய ஒப்பந்தம் 2020ம் ஆண்டு ஏற்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையை நடத்த கோரி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதோடு போராட்டத்தையும் முன்னெடுத்தது.இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை டிச.29ம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.