×

புதுக்கோட்டை அருகே 100 ஆண்டு பழமையான அணைக்கட்டு உடைந்தது

புதுக்கோட்டை: விராலிமலை அருகே 100 ஆண்டு பழமையான அணைக்கட்டும், மணப்பாறை அருகே குளமும் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பேராம்பூரில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து அப்பகுதி விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் 6 மதகுகளுடன் அணைக்கட்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டது. தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த குளத்தின் மூலம் ஆவூர், மதயானைபட்டி, மலையேறி, சோழியகுடி, ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த அணைக்கட்டு பழுதடைந்திருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் தற்ேபாது பெரியகுளம் நிரம்பி வழிகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே குளம் நிரம்பியதால் உபரி நீர் அணைக்கட்டு வழியாகவும், அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கலிங்கு வழியாகவும் திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் அணைக்கட்டில் 3 மதகுகளின் பக்கவாட்டு சுவர்கள் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த 3 மதகுகளின் வழியாக நீர் கசிந்து வெளியேறி வருகிறது. அதேபோல் கலிங்கு வழியாகவும் நீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 ஆண்டாக அணைக்கட்டை சீரமைக்காததை கண்டித்து, பேராம்பூர் பகுதி மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குளம் உடைப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீகம்பட்டி ஊராட்சியில் ஆலங்குளம் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் நிரம்பியது. தொடர்ந்து கடந்த 6ம் தேதி பெய்த வரலாறு காணாத மழையால் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்களுக்குள் பாய்ந்ததால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்த பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை கொண்டு கரையை அடைத்தனர். அதன்பின்னர் நிலைமை சரியானது. இந்நிலையில் இன்று காலை உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகிலேயே மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்களுக்குள் பாய்ந்து வருகிறது.  



Tags : Pugota , The 100 year old dam near Pudukkottai broke
× RELATED புதுக்கோட்டை அருகே குளத்தில் குளிக்க...