மதுரை: சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.. மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார், புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மதியம் மாரிதாஸ் வீட்டிற்கு சென்றனர். சம்மன் தரப்பட்டு, அவரை விசாரணக்கு அழைத்தும், அங்கிருந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் புதூர் காவல்நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு, மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மாரிதாஸை மதுரை மாவட்ட 4 வது குற்றவியல் நடுவர் நீதிபதி சுந்தர காமேஸ்வர முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். மாரிதாஸை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார், இதனையடுத்து மாரிதாஸை, மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் உத்தமபாளையம் கிளை சிறையில் அடைத்தனர்.