சென்னை: நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகளுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பிபின் ராவத் உருவபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, உ.பலராமன், முருகானந்தம், ஆர்.தாமோதரன், பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், மகாத்மா சீனிவாசன், எஸ்.காண்டீபன், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.பி.ரஞ்சன் குமார், முத்தழகன், நாஞ்சில் பிரசாத், அடையார் துரை, டில்லி பாபு, மாவட்ட பொறுப்பாளர்கள் கொட்டிவாக்கம் முருகன், சுமதி அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு, இந்தியாவை திக்குமுக்காட செய்து இருக்கிறது. சிறந்த தலைவன், சிறந்த தேசப்பக்தன். அவரை இழந்தது இந்திய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய இழப்பு. நாடாளுமன்றம் இருப்பதே விவாதம் நடத்துவதற்கு தான். வரலாற்றில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றுவது ஒன்றிய பாஜ ஆட்சியில் மட்டும் தான்.