சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டு மார்கழி மாத ஆரூத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 19ம் தேதி தேரோட்டமும், 20ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் என கோயில் தீட்சிதர்கள் அறிவித்து இருந்தனர்.இந்நிலையில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், தாசில்தார் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் அஜீதா பர்வீன், கோயில் தீட்சிதர்கள் சார்பில் வெங்கடேச தீட்சிதர், நவமலை தீட்சிதர், சமூக ஆர்வலர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கடந்த ஆனி திருமஞ்சன திருவிழாவில் பின்பற்றியபடி கோவிலிலேயே ஆரூத்ரா தரிசன விழாவை நடத்த கோட்டாட்சியர் ரவி, தீட்சிதர்களிடம் அறிவுறுத்தினார். கொரோனா தொற்று தற்போது குறைந்துள்ளதால் திருவிழாவை நடத்த அனுமதி கோரிய தீட்சிதர்கள், கோயிலில் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவை சொல்வதாக தெரிவித்ததையடுத்து கூட்டம் முடிந்தது.