கோவை: கோவை மாவட்டம் அன்னூர் மோப்பிரிபாளையம் பேரூராட்சிகள் மற்றும் சூலூர் விமானப்படைத் தளம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி, பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் தவறு நடக்கும் பட்சத்தில் எழுத்துப்பூர்வமாக புகார்கள் வந்தால் அதிகாரிகளுடன் கலந்து பேசி தனிநபர் ஆணையம் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் டிஜிட்டல் மீடியாக்கள் தனி நபர் ஆணையத்தின் மூலம் விசாரிக்கப்பட்டு அவையும் ஒழுங்குபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ஆன்லைன் மீடியாக்கள் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.