×

ஆவடி பேருந்து நிலையத்தில் மாணவிகள் குடுமிப்பிடி சண்டை: வீடியோ வைரலால் பரபரப்பு

சென்னை: ஆவடியில் உள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவிகள், மாநகர பஸ், ரயில் மற்றும் சைக்கிள்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். சில மாணவிகள், தங்கள் பகுதிக்கு செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மாணவிகள் திடீரென இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டனர். அப்போது ஒரு மாணவியின் தலைமுடியை பிடித்து கீழே இழுத்துப்போட்டு சில மாணவிகள் அவரை கால்களால் மிதித்தனர்.

இதை பார்த்ததும் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, அந்த மாணவியை பத்திரமாக மீட்டு மாணவிகளின் தகராறை விலக்கிவிட்டனர்.  மேலும் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோந்து பணியில் இருந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் போலீசார் தகராறு செய்த மாணவிகளை பிடித்து எச்சரித்தனர். அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். ஆவடி பஸ் நிலையத்தில் மாணவிகள் மோதிக்கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, பள்ளிக்கு வருகின்ற மாணவிகளை பெற்றோர்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கூறினர்.

Tags : Avadi , Student clashes at Avadi bus stand: Video goes viral
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!