×

ரூ.14.27 கோடி மதிப்பீலான சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.12.2021) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் சென்னை, மதுரை, கடலூர், திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பதிவு மண்டலங்களில் 14 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் விருத்தாசலம் - ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பொதுமக்களின் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணப் பதிவுகள், வில்லங்கச் சான்று வழங்குதல், ஆவணத்தின் சான்றிட்ட நகல் வழங்குதல், பல்வேறு திருமணச் சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்தல் போன்ற முக்கிய பணிகளை ஆற்றிவரும் சார்-பதிவாளர் அலுவலங்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அளித்திடவும், பணியாளர்களின் பணியினை எளிமைப்படுத்தும் வகையிலும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  

சென்னை பதிவு மண்டலத்தில் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் சேலையூர் சார்-பதிவாளர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம்; 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆலந்தூர் சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடம் மற்றும்  1 கோடியே 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலவாக்கம் சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடம்;  
திருநெல்வேலி பதிவு மண்டலம் விக்கிரமசிங்கபுரம், வேலூர் பதிவு மண்டலம் - நெமிலி, தஞ்சாவூர் பதிவு மண்டலம் - மதுக்கூர், திருச்சிராப்பள்ளி பதிவு மண்டலம் - இரும்புலிக்குறிச்சி, கடலூர் பதிவு மண்டலம் - சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தலா 1 கோடியே 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;

மதுரை பதிவு மண்டலத்தில் 1 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடமலைகுண்டு சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடம்; திருநெல்வேலி பதிவு மண்டலத்தில் 93 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடம்; வேலூர் பதிவு மண்டலத்தில்
1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள களம்பூர் சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடம்;  கடலூர் பதிவு மண்டலத்தில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விருத்தாசலம் ஒருங்கிணைந்த வளாகக் கட்டடத்தில் கட்டப்பட்டுள்ள விருத்தாசலம் - ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகக் கட்டடம்;

என மொத்தம் 14 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் விருத்தாசலம் மாவட்ட பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும், பதிவுத்துறையின் மென்பொருளோடு பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்து வரி பெயர் விவரங்கள் அடங்கிய மென்பொருளும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தண்ணீர் வரி மென்பொருளும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் கட்டணம் செலுத்துவோர் விவர மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளன.

சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பரிவர்த்தனை நடக்கும் போது பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கும்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் சொத்து வரி இரசீது, தண்ணீர் வரி இரசீது மற்றும் மின் கட்டண இரசீது தொடர்பான பெயர் மாற்ற விவரங்கள் தானாகவே இணைய வழியாக அனுப்ப ஏதுவாகும் திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

பதிவுத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் அமரத்துவம் அடைந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் / அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Registrar's ,Office , மு.க.ஸ்டாலின்
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...