×

கோவையில் மருத்துவர் அறிவுரை இல்லாமல் தனக்குத்தானே பிரசவம் பார்த்தவருக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

கோவை: கோவையில் மருத்துவர் அறிவுரை இல்லாமல் தனக்குத்தானே வீட்டில் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையை சேர்ந்த நகை பட்டரி தொழிலாளி விஜயகுமாரின் மனைவி புண்ணியவதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அந்த குழந்தையை பெற்று வளர்க்க விருப்பமில்லை என கணவரிடம் கூறி வந்ததாக தெரிகிறது. கரு கலைக்க முடியாத அளவிற்கு வளர்ந்ததால் வேறு வழியின்றி கருவை சுமந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று புண்ணியவதி வீட்டில் தனியாக இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் சொல்லாமல் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்திருக்கிறார். அப்போது தொப்புள்கொடி சரியாக அறுபடாததாலும், முறையாக பிரசவம் பார்க்காததாலும் குழந்தையும், தாயும் மயங்கினர். கணவர் விஜயகுமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது மயங்கிக்கிடந்த தாய், சேய் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் 4வது குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாததால் குழந்தை இறந்து பிறக்க வேண்டும் அல்லது பிறந்த இறங்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Coimbatore , Coimbatore, childbirth, child, mortality
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...