×

அதிமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு கஞ்சா போதைக்காக ரவுடிகளுடன் சேர்ந்து 367 கொலைகள் செய்த சிறுவர்கள்

*இளஞ்சிறார் குற்றவாளிகள் அதிகமுள்ள மாநிலங்களில் 4வது இடத்தில் தமிழகம்

சென்னை : அதிமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் மாநிலம் முழுவதும் கஞ்சா போதைக்காக ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து 367 கொலைகளை சிறுவர்கள் மட்டும் செய்துள்ளனர். இளஞ்சிறார் குற்றவாளிகள் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2016-2021 காலக்கட்டத்தில் கொலை, கொலை முயற்சி, ஆள் கட்டத்தல், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் இயல்பைவிட அதிகமாக நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், மாநிலத்தில் குற்றங்கள் குறையவில்லை.

மக்கள் தொகைக்கு ஏற்றப்படி குற்றங்களும் அதிகரித்து தான் வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இளஞ்சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இளஞ்சிறார் குற்றவாளிகள் அதிகமுள்ள மாநிலங்களில் டெல்லி முதல் இடத்திலும், குஜராத் 2வது இடத்திலும், 3வது இடத்தில் மத்திய பிரதேசமும் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் தமிழகம் உயர்ந்து இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட ஒழுங்கில் நாட்டில் முதல் மாநிலமாக திகழ்வதாக அதிமுக ஆட்சியில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளஞ்சிறார் குற்றவாளிகள் அதிக எண்ணிக்கையில் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், மதுரை நகரம், திருச்சி, தூத்துக்குடி, மதுரை புறநகர், திருப்பூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கடந்த 2016-2020வரையான ஆட்சி காலத்தில் சிறுவர்கள் மட்டும் 367 கொலைகள் கொடூரமாக செய்துள்ளனர்.

 இதில் பெரும்பாலான கொலைகள் கஞ்சா போதைக்காக செய்யப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவர்களை, ரவுடிகள் தங்களது ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொலைகள் செய்துள்ளனர். சிறுவர்கள் கொலை செய்தால் நீதிமன்றத்தில் பெரிய அளவில் தண்டனை இருக்காது என்று ரவுடிகள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணம் கொடுத்தும், மதுப்பழக்கத்திற்கு உட்படுத்தியும், சிகரெட் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களை கொலை செய்யும் அளவிற்கு தயார்படுத்தி வைத்துள்ளனர்.

உதாரணத்திற்கு தென் சென்னையில் தாதாவாக சுற்றி வரும் சிடி மணி மற்றும் வடசென்னை ரவுடி காக்காதோப்பு பாலாஜி ஆகியோர் வந்த கார் மீது அமெரிக்க துணை தூதரகத்தின் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட 9 குற்றவாளிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இருந்தனர். இது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. தாதாவாக சுற்றி வரும் ரவுடிகளையே சிறுவர்களை வைத்து எளிதாக கொலை செய்ய அவர்களுக்கு எதிர் குழுவை சேர்ந்த ரவுடிகள் பயிற்சி அளித்ததும் விசாரணையில் அம்பலமானது.  

இதுபோல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பெரும்பாலான கொலைகளில் கைதான குற்றவாளிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பலர் இருந்தனர்.  பல்வேறு கொலை வழக்குகளில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் ஏ பிளஸ் ரவுடிகள் தற்போது கொலைகளில் நேரடியாக ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றனர். அவர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி சிறுவர்களை மூளை சலவை செய்து, அவர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி கொலைகளை செய்ய பயன்படுத்தி வருகின்றனர். அப்படி கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லும் சிறுவர்களை அவர்களே நீதிமன்றம் மூலம் ஜாமீனில் எடுத்து அவர்களை இளம் ரவுடிகளாக உருவாக்கி தங்களது கைக்குள் வைத்து கொள்கின்றனர்.

 தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறையில் தான் பெரும்பாலான ரவுடிகள் உள்ளனர். அவர்கள் சிறைக்குள் இருந்தே சிறுவர்களை இயக்கி கொலை உள்ளிட்ட சம்பவங்களை எளிமையாக முடிக்கின்றனர்.  கடந்த மாதம் கூட திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் இரவு பணியில் இருந்த போது, ஆடு திருடும் கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 சிறுவர்களும் போதை மாத்திரைகளை பயன்படுத்தி இருந்ததாகவும், அதனால் எளிதில் கொலை செய்ய முடிந்ததாகவும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.அதைதொடர்ந்தே சென்னை மாநகர காவல் துறை சார்பில் மாநகரம் முழுவதும் மருந்துக்கடை உரிமையாளர்களை நேரில் அழைத்து, மருத்துவர்கள் பரிந்துரை கடிதம் இல்லாமல் சிறுவர்களுக்கு மாத்திரைகள் மற்றும் மருந்துகள் கொடுக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் கஞ்சா மற்றும் குட்கா போதை பொருட்கள் தடையின்றி விற்கப்பட்டதால் சிறுவர்கள் அதிகளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 23ம் தேதி இரவு முதல் மாநிலம் முழுவதும் 53 மணி நேரம் நடந்த ரவுடிகள் வேட்டையில் 21,592 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 294 ரவுடிகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள். அந்த அதிரடி வேட்டையில் ரவுடிகளிடம் இருந்து 7 நாட்டு துப்பாக்கிகள், அரிவாள்கள், கத்தி என 1,117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்கும் 202 ரவுடிகள் மற்றும் போதை பொருட்களை விற்கும் நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது.இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் அதிமுக ஆட்சியில் எடுத்து இருந்ததால் 18 வயதுக்குட்பட்ட  சிறுவர்கள் கஞ்சா போதைக்காகவும், மதுவுக்காகவும் கொலை செய்யும் அளவிற்கு சென்று இருக்கமாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லாததால் தான் இளஞ்சிறார் குற்றவாளிகள் அதிகம் உள்ள மாநில பட்டியலில் தமிழகம் 4 வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : AIADMK , Chennai: During the AIADMK's 5 year rule, 367 murders were committed by boys alone in collaboration with rowdies for cannabis addiction across the state
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...