×

நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்‍கை 19-ஆக உயர்வு!: பதற்றத்தை தணிக்க மோன் மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிப்பு..!!

மோன்: நாகாலாந்து துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்ட படுகொலை என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பணி முடிந்து அவர்கள் ஒரு வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அந்த வாகனத்தை குறி வைத்து பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 19 உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் நாகலாந்தில் கலவரம் வெடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கி உள்ளனர். அவர்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். தீவிரவாதிகள் என நினைத்து துப்பாக்கிசூடு நடத்தியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ள நிலையில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு, துப்பாக்கிச்சூடு செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது நாகாலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாகனத்தில் சென்ற தொழிலாளர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகவும், இது திட்டமிட்ட படுகொலை என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகள்படி சம்பவ இடத்துக்கு போலீஸ் யாரும் அழைக்கப்படவில்லை என்றும் எப்.ஐ.ஆரில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழப்பு நேர்ந்ததாக எப்.ஐ.ஆரில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதற்றத்தை கட்டுப்படுத்த மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியை முதலமைச்சர் இன்று பார்வையிடுகிறார்.

Tags : Nagalandu ,Mon , Nagaland, Firing, Mon District, Curfew
× RELATED சமூக விரோதி படத்துக்கு மறுதணிக்கை