சென்னை: சென்னை புனிதஜார்ஜ் கோட்டை, ராணுவ தலைமையகத்தில் ராணுவ வீரர் ஜாஸ்பர் சிங் (30) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜார்ஜ் கோட்டை ராணுவ அணிவகுப்பு மைதானம் அருகே இவர் நடந்து சென்றபோது, அங்கு வந்த இருவர் ஜாஸ்பர் சிங்கிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.1000த்தை பறித்துக் கொண்டு தப்பமுயன்றனர். இதையடுத்து ஜாஸ்பர் சிங் கூச்சலிடவே அருகில் இருந்த ராணுவ வீரர்கள் தப்ப முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர். தகவலறிந்த கோட்டை காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த முனிவேல் (22), பரத் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து செல்போனும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் முனிவேல் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.