காஷ்மீர்: இன்றைய காங்கிரஸ் தலைமை குறித்து விமர்சனம் செய்பவர் ஓரம் கட்டப்படுகின்றனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் ரம்பனில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜி-23 அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பேசுகையில், ‘இன்றைய காங்கிரஸ் தலைமைக்கு யாரும் சவால் விடுக்கவில்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி வரும் வந்த போது, அப்போதைய தலைவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும், அதனை அவர்கள் பொருட்படுத்ததில்லை.
ஆனால் இன்றைய காங்கிரஸ் தலைமை அவ்வாறு விமர்சனம் செய்யும் தலைவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக பார்க்கிறது. மேலும், யாருடைய விமர்சனத்தையும் கேட்க விரும்புவதில்லை; அதனையும் மீறி விமர்சனங்களை முன்வைத்தால் அவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்க உள்ளதாக சிலர் பேசி வருகின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை. யார் எப்போது இறப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாதது போலவே, அடுத்து என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
அதேபோல், அரசியலிலும் அடுத்து என்ன நடக்கும் என்று கூறமுடியாது. நான் அரசியலில் இருந்து விலக விரும்பினேன். ஆனால், லட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது அரசியல் பயணத்தை தொடர்து வருகிறேன்’ என்று பேசினார்.