×

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி வழக்கு..!!

சென்னை: அதிமுக தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், டிசம்பர் 1ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஒற்றை தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கே.சி.பழனிசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் இந்த பதவிகளுக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடத்தப்படும் என 2ம் தேதி அறிவிக்கப்பட்டு, அது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற அதிமுகவின் விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் கே.சி.பழனிசாமி தெரிவித்திருக்கிறார். சங்கங்கள் பதிவு சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல், பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருக்கிறார்.

எனவே,  அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்ட பின்பு தான் முறையாக தேர்தல் நடத்த வேண்டும், தன் மீதான தடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று காலை முறையிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு இன்று மதியம் 2:30 மணிக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வரவிருக்கிறது. 


Tags : K.K. General ,Chennai ,D.C. ,Palanisami , AIADMK Election, Chennai High Court, KC Palanisamy
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...