சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட அறிக்கை: தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) மற்றும் உதவி கண்காணிப்பாளர் (வேதிப்பிரிவு) தமிழ்நாடு தொழில் பணிகள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு கடந்த ஜனவரி மாதம் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 36 விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 17ம் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.