திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 50 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வரை சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் 500க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் இந்த அறைகளில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் திரும்பி சென்று விட வேண்டும். இதன் காரணமாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நெய்யபிஷேகம், பம்பா ஸ்நானம் பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவும் பக்தர்கள் வருகை குறைவுக்கான காரணமாக உள்ளது. இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, நெய்யபிஷேகத்தை பக்தர்கள் நேரடியாக நடத்துவது, பம்பா ஸ்நானம், சன்னிதானத்தில் பக்தர்கள் 12 மணி நேரம் தங்குவது உள்பட வசதிகள் மீண்டும் தொடங்கப்படும். இதற்கான அனுமதியை அரசு விரைவில் வழங்கும் என்று நம்புகிறேன். ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்யும்படி அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.