திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள் பாலித்தார். 2வது நாளான நேற்று முன்தினம் காலை 7 தலைகள் கொண்ட பாம்பின்மீது பெரிய சேஷ வாகனத்தில் மகாவிஷ்ணு அலங்காரத்தில் வைகுண்ட நாதனாக பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். அன்றிரவு அன்ன வாகனத்தில் அருள்பாலித்தார்.
பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று கோயில் வளாகத்தில் கிருஷ்ண முக மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடியும், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க முத்துப்பந்தல் வாகனத்தில் ஆதிலட்சுமி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர், ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பழம், மலர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் ஏழு முறை நடந்தது. தொடர்ந்து, இரவில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பத்மாவதி தாயார் அருள்பாலித்தார்.