வாஷிங்டன்: 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் கிருமி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் பேசிய அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபவுசி தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய அமெரிக்கர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக கூறினார். நவம்பர் 22ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பிய கலிபோர்னியாவை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 29ம் தேதி தொற்று உறுதியாகி இருப்பதாக அந்தோணி ஃபவுசி தெரிவித்தார்.
அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக கூறிய அந்தோணி ஃபவுசி, ஒமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அமெரிக்க இளைஞருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அமெரிக்கர்கள் விரைவில் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஃபவுசி அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் ஒமிக்ரான் கிருமி முதல் முதலில் கண்டறியப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் கொரோனா பரவல் இரு மடங்காக உயர்ந்திருப்பதால் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிய அனைவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே 60 வயதினருக்கும் மேற்பட்டோருக்கு கட்டாய தடுப்பூசி அளிக்கும் திட்டத்திற்கு கிரீஸ் அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.