டெல்லி: ஒமிக்ரான் தொற்று பரவல் அச்சம் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடையை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து சேவை டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலக நாடுகளில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான் பரவல் அச்சம் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே சர்வதேச விமான சேவை மேலும் ஒத்திவைக்கப்படுவதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகள் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பல அடக்கு உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா கிருமியான ஒமிக்ரான், பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளில் அதிக அக்கறை காட்டப்பட்டு வருகிறது.