நெல்லை: அம்பை ஊர்க்காடு தாமிரபரணி ஆற்றங்கரை அருகே இறந்த நிலையில் பெண் சிறுத்தை ஒதுங்கி கிடந்தது. வனத்துறையினர் இதனை கைப்பற்றி வசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பாபநாசம், மணிமுத்தாறு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்நிலையில் பெருவெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண் சிறுத்தை இறந்த நிலையில், அம்பை ஊர்க்காடு அருகே கரை ஒதுங்கி கிடந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அம்பை புலிகள் காப்பக துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் அறிவுறுத்தல்படி அம்பை வனச்சரக வனப்பணியாளர்கள் பெண் சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சிங்கம்பட்டி காப்புக்காடு வனப்பகுதியில் எரியூட்டினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.