×

கூகுளில் இல்லாத தகவல்களை தரும் மையம் 1.36 லட்சம் புத்தகங்கள் குவிந்து கிடக்கும் குமரி நூலகம்

* போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சிகள்
* மாற்று திறனாளிகள், குழந்தைகளுக்கு சிறப்பு வசதிகள்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை நூலகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. கூகுளில் இல்லாத பல அரிய தகவல்களை தரும் புத்தகங்கள் வந்துள்ளன. புத்தகத்தில் உலகத்தை படிப்போம். உலகத்ைதயே புத்தகமாக படிப்போம் என்பது போல பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், மாபெரும் தலைவர்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டிய பெருமை நூலகங்களையே சாரும். இந்த நூலகங்கள் தான், பலரின் அறிவு பசியை தூண்டி விட்டு, அவர்களுக்குள் முடங்கி கிடந்த திறன்களை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தது. தற்போது ஆன்ட்ராய்டு மொபைல் போன்களின் வளர்ச்சியால் நூலகங்களை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கூகுள் வலை தளத்தில் தகவல்கள் கொட்டி கிடப்பதாக இன்றைய இளைய சமுதாயம் எண்ணுகிறது. உறங்கும் ஒரு சில மணி நேரங்களை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செல்போன் தான் உலகம் என நினைக்கும் காலம் வந்து விட்டது.

 70 சதவீத தீமைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது இந்த செல்போன்கள் தான். செல்போன்களில் தகவல்களை தேடுகிறோம் என்ற போர்வையில், தேவையில்லாத இணைய தளங்களுக்குள் நுழைந்து வாழ்க்கையை சீரழித்தவர்கள் ஏராளம் உண்டு. இதனால் செல்போன்களில் இருந்து இளைஞர்களை, இளம்பெண்களை வெளியே ெகாண்டு வருவது என்பது தற்போது மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது. இந்த சவால் நிறைந்த யுத்தத்தை தொடங்கி, அதில் கொஞ்சம், கொஞ்சமாக வெற்றி அடைந்து வருவது நூலகங்கள் தான். செல்போனே உலகம் என்று எண்ணி இருக்கும் இளைய சமுதாயத்தை, தன்னகத்தே கவர்ந்து இழுத்து வரும் பணியை செய்கிறது நூலகம்.
அந்த வகையில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தலைமை நூலகத்தில் எண்ணற்ற தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் நிறைந்து இருக்கின்றன. கதை புத்தகங்களும், நாளிதழ்கள் இருக்கும் நூலகமாக மட்டுமல்லாமல், பொது அறிவு திறனை வளர்த்து இளைஞர்களை சவால் நிறைந்த ஒன்றிய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் பணிகளையும் நூலகம் செய்கிறது.

நாகர்கோவிலில் உள்ள தலைமை நூலகத்தில் மட்டும் 32 ஆயிரத்து 201 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்குள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 90 ஆகும். அறிவியல், வரலாறு, பொது அறிவு, தமிழ் இலக்கியம், விலங்கியல், தாவரவியல், அரசியல் அறிவு, வேளாண்மை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன. கொரோனா காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் மூடி கிடந்த நூலகங்கள் இப்போது  தான் திறக்கப்பட்டுள்ளன. மீண்டும் பழைய நிலைக்கு வேகமாக வந்து கொண்டிருக்கும் இந்த நூலகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 10க்கும் மேற்பட்டவர்கள் தற்போது அந்த தேர்வுகளில் வென்று அரசு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

மாவட்ட தலைமை நூலகம் தரை தளம், முதல் தளம், 2ம் தளத்தை கொண்டு செயல்படுகிறது. இதில் 2 வது தளத்தில் தான் போட்டி தேர்வுக்கான மையம் உள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட அறையில் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு தேவையான டேபிள், இருக்கை வசதிகள் உள்ளன. போட்டி தேர்வு சம்பந்தமான புத்தகங்கள் அலமாரியில் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவ, மாணவிகள் எடுத்து தங்களுக்கு தேவையான குறிப்புகளை எடுக்கலாம். தினமும் தற்போது ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். போட்டி தேர்வு வகுப்புகள் மீண்டும் தொடங்கினால் அதிகம் பேர் வர வாய்ப்பு உண்டு. இங்கு கீழ் தளத்தில் பார்வையற்றோர், மாற்று திறனாளிகள் அமர்ந்து பயில்வதற்கான தனி அறை உள்ளது. இங்கு பார்வையற்றவர்கள் தகவல்களை அறிந்து ெகாள்ளும்  வசதிகளும் உள்ளன. வீடியோ உரையாடல் மூலம் அவர்கள் தகவல்களை பெற முடியும் என்பதுடன், அவர்களுக்கான பிரேத்யேக எழுத்துக்களுடன் கூடிய புத்தகங்களும் உள்ளன. முதல் தளத்தில் குழந்தைகள் படிப்பதற்கான அறை உள்ளது. குழந்தைகளுக்கான தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. பொது நூலக இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நூலகர் வழிகாட்டுதலுடன் பயிற்சிகள், புத்தங்கள் வழங்கப்படுகின்றன.

உலகமே செல்போனுக்குள் தான் இருக்கிறது. இன்டர்நெட்டில் பல தகவல்களை குழந்தைகள் பெற முடியும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கும் பெற்றோர்களால் தான் குழந்தைகளின் எதிர்காலமும் பாழாகிறது. எனவே கூகுளில் இல்லாத பல தகவல்கள் நிறைந்த நூலகத்துக்கு குழந்தைகளை அழைத்து செல்வோம். வாரம் ஒரு முறையாவது  குறைந்தது 1 மணி நேரமாவது நூலகத்துக்கு அழைத்து சென்று புத்தகங்களை வாசிக்க வையுங்கள். செல்போன்களில் படிப்பது, பார்ப்பது அழிந்து போகும். ஆனால் புத்தகங்களில் நாம் படிப்பது என்றைக்குமே அழியாது. இந்த உலகத்தை புரிந்து ெகாள்ள புத்தகங்களை படிப்போம். நாளிதழ்களும், புத்தகங்களும் தான் உலக அறிவை வளர்க்கும் என்பதை குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பணியை நூலகத்துடன் இணைந்து பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

Tags : Kumari Library ,Google , Google, information, 1.36 lakh, books, Kumari Library
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்