×

அந்தியூர் அருகே உடல்நலம் குன்றிய ஆசிரியரை தொட்டில் கட்டி7 கி.மீ. தூக்கி சென்ற கிராம மக்கள்

அந்தியூர்:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்டது கத்திரிமலை. 7 கி.மீ. சாலை வசதியின்றி உள்ள இந்த மலை கிராமத்திற்கு நடைபாதை மட்டுமே வழி. இங்கு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் குணசேகரன். இவர், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர். இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் அங்கேயே மனைவியுடன் தங்கி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.

விடுமுறை தினமான நேற்று முன்தினம் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தகவல் அறிந்த கிராம மக்கள், உடனடியாக அவரை தொட்டில் கட்டி மலைப்பாதை வழியாக சுமார் 7 கி.மீ. தூரம் தூக்கி வந்தனர். அதன்பின், வாகனம் மூலம் அழைத்துச் சென்று கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மேட்டூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த பின் நேற்று முன்தினம் இரவே வீடு திரும்பினார். கிராம மக்களின் அன்பால் ஆசிரியர் நெகிழ்ந்து போனார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

Tags : Anthiyur , Anthiyur, villagers
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு