டேராடூன்: உத்தரகாண்ட்டில் ரூ.30ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வருகிற 4ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆக்சிஜன் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக கடந்த அக்டோபர் 4ம் தேதி பிரதமர் மோடி ரிஷிகேஷ் வந்தார். இதனை தொடர்ந்து நவம்பர் 5ம் தேதி கேதர்நாத் கோயிலை பார்வையிட்ட பிரதமர் மோடி அங்கு ஆதி குரு சங்கராச்சாரியா சிலையை திறந்து வைத்தார். இந்நிலையில் 3 மாதத்தில் மூன்றாவது முறையாக வருகிற 4ம் தேதி உத்தரகாண்ட் செல்கிறார்.
சுமார் ரூ.26ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகின்றார். மேலும் ரூ.4ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று ஆய்வு செய்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.