டெல்லி: கிரிப்டோ கரன்ஸியான பிட்காயினை இந்தியாவில் ஒரு நாணயமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு அடையாளம் தெரியாத குழுக்களால் பிட்காயின் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தலையீடு ஏதும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொருட்கள், சேவை பெறவும் பணப் பரிமாற்றத்துக்கும் பிட்காயின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் பிட்காயினில் முதலீடு செய்வது, பிட்காயினில் வர்த்தகம் செய்வது, பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகபடுத்தப்பட உள்ளது. இந்த மசோதாவின் மூலம் சில தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை கொண்டுவரப்படும். அதே நேரம், ரிசர்வ் வங்கி மூலம் அல்லது ஒப்புதலுடன் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக பிட்காயின் பரிவர்த்தனைகள் மிக ரகசியமாக மிக வேகமாக இந்தியாவில் வளர்ந்து வருவது மத்திய அரசுக்குத் தெரியா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
மக்களவையில் பிட்காயின் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; கிரிப்டோ கரன்ஸியான பிட்காயினை இந்தியாவில் ஒரு நாணயமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவில் பிட்காயினில் நடைபெறும் பணப்பரிவர்தனை தொடர்பான விவரங்களையும் அரசு சேகரிக்கவில்லை எனவும் கூறினார்.