பவானி : பவானி நகர திமுக, நகர இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பவானியில் குதிரை வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. பவானி - ஆப்பக்கூடல் ரோட்டில் காடையம்பட்டி அருகே நடைபெற்ற இந்த பந்தயத்துக்கு நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித் வரவேற்றார். போட்டிகளை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
போட்டிகள் தொடங்கியதும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓட தொடங்கின. இதனை ரோட்டின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.
உள்ளூர் குதிரை பிரிவில் நேஷனல் பவானி, ஈரோடு சரவணன் குரூப்ஸ் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக சிங்காரம் ரூ.9 ஆயிரமும். மூன்றாம் பரிசாக வெங்கிடு ரூ.8 ஆயிரமும் பெற்றனர். நடு குதிரை பிரிவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற கோவை டாலி கிங், ஆத்தூர் ஏவிஎம் புரூட்ஸ், தேவர் வம்சம் குதிரைகளுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
பெரிய குதிரை பிரிவில் மூன்று இடங்கள் பெற்ற நேஷனல் பவானி சேலம் சந்திரன் - ஈரோடு சரவணன் குரூப்ஸ், கோவை பாமாகண்ணு சரவணன், கரூர் நாவலடியான் ராஜேந்திரன் ஆகியோருக்கு முறையே ரூ.20 ஆயிரம்,ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சேகர், பவானி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் மகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சித்தையன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜசேகர், நல்லசிவம், அவைத் தலைவர் மாணிக்கராஜ், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியம், திமுக நிர்வாகிகள்சண்முகமணி, சண்முகசுந்தரம், யாழினி ஜெகதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோபி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமை தாங்கினார். அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.பந்தயத்தில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து 15 க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குதிரை வண்டி பந்தயத்தில் பரிசு பெற்ற குதிரைகளுக்கு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் கொங்கர்பாளையம் ஜம்பு என்கிற சண்முகம்,சிந்துரவி, மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செல்வன், முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.