வேலூர்: தமிழ்நாட்டில் வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வேலூரில் இருந்து 59 கிலோ மீட்டர் மேற்கு - தென்மேற்கு பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 4:17 மணியளவில் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் குவிந்தனர்.
ஆற்றல் குறைந்த நிலநடுக்கம் என்பதால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக சிறிது நேரம் சாலைகளில் நின்றிருந்த மக்கள் பின்னர் வீடுகளுக்கு திரும்பினர். லேசான நிலஅதிர்வு என்பதால் பெரும்பாலான மக்கள் அதனை உணரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதிகாலை வேலூர் சுற்றுவட்டாரத்தில் லேசாக அதிரவைத்த நிலநடுக்கத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.