மும்பை: உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று முதல் அலை, 2வது அலை பரவி ஓரளவு கட்டுக்குள் அடங்கி வரும் நேரத்தில், தற்போது 3வது அலையாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது மக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகை தனிஷா முகர்ஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை கஜோல் சகோதரியும், நடிகையுமான தனிஷா முகர்ஜி, தமிழில் 2007ல் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்த அவர், தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தனிஷா முகர்ஜி, ‘எனக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.