திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆனால், நேற்று பெய்த தொடர் மழை காரணமாக, விடுமுறை தினமாக இருந்தும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது. இதனால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பலகையும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பக்தர்கள் நேற்று விரைவாக சுவாமி தரிசனம் செய்தனர்.