×

கோயில் பிரச்னையில் மோதல்: பாட்டில் குண்டு வீச்சு

சுசீந்திரம்: நாகர்கோவில் அருகே சின்னனைந்தான்விளை பகுதியில் பிச்சகாலசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோயிலில், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கோயில் பராமரிப்பு பணியை அந்த பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் மேற்ெகாண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஆதீன மடத்தின் ஏற்பாட்டின் பேரில் நிலம் வாங்கப்பட்டு கோயிலுக்கு அலங்கார வளைவு, சுற்றுசுவர் கட்டுமான பணிகள் தொடங்கின. இதற்கிடையே சுவர் கட்டுவதால், மற்றொரு தரப்புக்கு பிரச்னை ஏற்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு, காவல் நிலையம் வரை பிரச்னை சென்றது. சுசீந்திரம் போலீசார் இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கார், பைக்குகளில் வந்த 30 பேர் கொண்ட கும்பல், கோயில் வளாகத்துக்குள் புகுந்து டியூப் லைட், சேர்கள் உள்பட அங்கிருந்த ெபாருட்களை சூறையாடியதுடன், கடப்பாரை கம்பிகள் கொண்டு சுவரையும் இடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் திரண்டனர். அவர்கள் இந்த கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. அப்போது ஆயுதங்களுடன் வந்திருந்த கும்பல், பீர் பாட்டில்களில் மண்ணெண்ணெய் நிரப்பி, திரி போட்டு தீ வைத்து வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. தகவலறிந்த போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த சமயத்தில் பொதுமக்கள் திரண்டு, தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்களை கைது செய்ய வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Conflict over temple issue: Bottle bombing
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...