×

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்; சென்னையில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு.! நாளை முதல் படிப்படியாக குறையும்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பை சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் விவசாயமும் கடுமையான சேதத்தை சந்தித்துள்து.
இந்த நிலையில் நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மின கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது.

வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. குறிப்பாக புழல் பகுதியில் அண்ணாநகர், பாலாஜி நகர், சக்திவேல் நகர், ஆவடி பகுதியில் ராம் நகர், பருத்திப்பட்டு, மேற்கு கோபாலபுரம், முல்லைநகர், திருநின்றவூர், அம்பத்தூர் டி.டி.பி.காலனி, கொரட்டூர் அன்னை நகர், வனசக்தி நகர், டி.வி.எஸ் காலனி, அயனாவரம், கெல்லீஸ், கே.கே.நகர், தி.நகர், பூந்தமல்லி, திருவேற்காடு, செம்மஞ்சேரி, மாங்காடு, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னையில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று, நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அதேபோல் 29ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அதேபோல் வருகிற 30ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் வருகிற 1ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் நாளை (29ம் தேதி) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி நாளை மறுநாள் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா, ஒடிசா இடையே கரையை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 1ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chennai , Delay in formation of new barometric depression; Chance of heavy rain in Chennai today! Will gradually decrease from tomorrow
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...