×

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஆவின் பால் தடையின்றி விநியோகம்

சென்னை: சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஆவின் பால் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பால் விநியோகம்  செய்வதில் தடை ஏற்பட்டால் உடனடியாக செயல்பட சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய ஆவின் பால் பண்ணைகளில் இருந்து  சீராக விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் மழைநீர் அதிகம் தேங்கி நின்றதால் ஆவின் பால் விநியோகம்  செய்வதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மாற்று வழியிலும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள்  மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் மேடான பகுதிகளில் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டது. கனமழையால் பால் விநியோகம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 2 மணி நேரம் முன்னதாகவே பால் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை 137 வாகனங்களில், 180 டீலர்கள் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கு  தடையின்றி, எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டது.  மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையிலும் 13 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும் பால் கொண்டு செல்லும் வாகனங்கள் மழை  வெள்ளத்தில் சிக்கினாலோ அல்லது பழுதடைந்தாலோ உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் உதவி பொது மேலாளர்கள் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பால் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்  வகையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai , Uninterrupted supply of Avin milk as it continues to rain in Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...