சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய தடமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, இந்த சாலையில், சிங்கப்பெருமாள் கோயில் அருகே நேற்று இடுப்பளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பல வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சென்னை -செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு - சென்னை மார்க்கமாக 5 மணி நேரமாக போக்குவரத்து தடைபட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரத்திற்கு பிறகு கனரக வாகனங்கள் மட்டும் தத்தளித்தபடி அவ்வழியே மெதுவாக கடந்து சென்றன. இதேபோல், பொத்தேரி - கூடுவாஞ்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.