காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலை தெருவில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்குகிறகது. கடந்த சில நாட்களுக்கு முன், மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள், ஸ்ரீராமை மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர், பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கடந்த 17ம் தேதி, சூப்பர் மார்க்கெட்டை சூறையாடினர். மேலும், ஸ்ரீதரின் கூட்டாளியான ஏட்டு பிரபுவின் 2 மகன்களையும், சிறுவாக்கம் பகுதியில் ராஜமன்னார், வெங்கடேசன் ஆகியோரை வெட்டிவிட்டு தலைமறைவாயினர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேற்கண்ட சம்பவங்களை செய்து, தலைமறைவாக இருந்த பிரபல ரவுடிகள் சிறுவாக்கத்தைச் சேர்ந்த ஜெமினி (எ) மணிகண்டன் (24), ஜெகன் (29), வையாவூர் அருண் (எ) அட்டு அருண் (21), தேனம்பாக்கம் பிரசாந்த் (24) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.