சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீர் மாசுடைந்து குடிக்க லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. மழைக்காலம் என்பதால் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் பெருகுவதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் பரவி வருகிறது. எனவே பருவ மழை காலத்தில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
சமையலுக்கு சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். மழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.